ஆசிரியருக்கு பாராட்டுவிழா - டாக்டர் சரவணன் நெகிழ்ச்சி

ஆசிரியருக்கு பாராட்டுவிழா - டாக்டர் சரவணன் நெகிழ்ச்சி

கீழடியைக் கண்டறிந்த ஆசிரியருக்கு பாராட்டுவிழா நடத்துவேன் என டாக்டர் சரவணன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.


கீழடியைக் கண்டறிந்த ஆசிரியருக்கு பாராட்டுவிழா நடத்துவேன் என டாக்டர் சரவணன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கீழடியை முதன் முதலாகக் கண்டறிந்து உலகுக்கு அறியத்தந்த ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியத்துக்கு பல்வேறு அறிஞர் பெருமக்கள் சூழ பாராட்டு விழா நடத்துவேன் என அதிமுக மருத்துவர் அணியின் இணை செயலாளர் டாக்டர் சரவணன் பேட்டி. கீழடியை முதன் முதலாகக் கண்டறிந்து தொல்லியல் துறைக்கு அறியத் தந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியம் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சிறப்புத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. இதனைக் கண்ட அதிமுக அருத்துவர் அணியின் இணை செயலாளரும், அதிமுகவின் சார்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளராகவும் கருதப்படுகின்ற டாக்டர் சரவணன் மதுரை மாவட்டம் சிலைமானில் உள்ள ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியம் வீட்டிற்குச் சென்று அவருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரையின் அருகே அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் கீழடி, உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழர் நாகரிகத்தின் தொன்மை மட்டுமல்ல உச்சம் என்று கூட சொல்லலாம். கடந்த பத்து ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த கீழடி, கடந்த 2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்தான் அகழாய்வுக்கான தொடக்கம் நிகழ்ந்தது. 9 கட்டத்தை தாண்டி தற்போது 10-ஆம் கட்ட அகழாய்வை எட்டியிருக்கிறது. அங்கு அமைந்துள்ள அருங்காட்சியகம் தமிழரின் பெருமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. கீழடியை உலகிற்கு முதன் முதலாகக் கண்டறிந்த அரசுப்பள்ளி வரலாற்று ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியத்தின் பேட்டியை ஈடிவி பாரத் ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். அந்தக் காலத்திலேயே தொல்லியல் உணர்வோடு இயங்கிய ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியத்தின் ஆர்வம் குறித்து அறிந்தபோது பெரிதும் உணர்வு மேலிட்டது. நான் 5-ஆம் வகுப்பு பயிலும்போது ஜெஸ்சி மிஸ்-சும் இதேபோன்று எங்களை ஊக்குவித்தவர் ஆவார். தனது மாணவர்களை வரலாற்றுத் தேடலோடு உருவாக்க வேண்டும் என ஆசிரியர் பாலசுப்பிரமணியம் நினைத்து அவ்வாறே உருவாக்கினார். இதற்காக ஊக்க மதிப்பெண்கள் அளித்து மாணவர்களை உற்சாகமூட்டியுள்ளார். அதனால்தான் கீழடி போன்ற தொன்மையான இடத்தை நம்மால் அறிய முடிந்துள்ளது. அவர் தற்போது வசிக்கும் சிலைமான் பகுதி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். கடந்த முறை அதன் எம்எல்ஏ-வாக நான் இருந்தேன். நானும் ஆசிரியரின் மகனாக, கிராமச்சூழலிலிருந்து வந்தவன். அதனால் அக்குறிப்பிட்ட கட்டுரையை வாசிக்கும்போது, அத்தனை ஆர்வம் மேலிட்டது எனக்கு. திரைப்படங்களில் நடிக்கின்ற கதாநாயகர்களைதான் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நமக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கக்கூடிய வரலாற்று ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியம், கீழடியின் தொடக்கமாக இருந்திருக்கிறார் என்பது பெருமைக்குரியது. ஆனால், இந்த விசயம் வெளி உலகுக்கு வராமல் போனது ஆச்சரியமாக உள்ளது. இப்பகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராக இருந்தும்கூட ஆசிரியரை அறியாமல் போய்விட்டோமே என்ற வருத்தம்கூட எனக்குள் உள்ளது. சிலைமான் ஊராட்சி மன்றத் தலைவரோடு இணைந்து பணியாற்றியிருந்தும்கூட நாம் அறியத்தவறி விட்டோமே என வேதனைப்படுகிறேன். அக்கட்டுரையில் ஆசிரியர் கூறும்போது, அகழாய்வு மேற்கொள்கின்ற மொத்த இடத்தின் ஒரு பகுதியைத்தான் கண்டறிந்துள்ளோம். வீடு என்ற ஒன்று இருந்தால் வாசல் என ஒன்று இருக்க வேண்டும். வாசல் என்று இருந்தால் நிறைய வீடுகள் இருந்திருக்க வேண்டும். அதற்கென்று ஒரு தெரு இருந்திருக்க வேண்டும். அவையெல்லாம் ஏன் இன்னும் கண்டறியப்படவில்லை. வணிக நகரமா அல்லது மக்கள் வாழக்கூடிய நகரமா என ஆசிரியர் எழுப்பிய கேள்விதான், என்னை அவரது வீட்டிற்கு இழுத்து வந்திருக்கிறது. இந்த அகழாய்வு இன்னும் சரியான திசையில் செல்ல வேண்டும் என்ற அவரது ஆதங்கமும் அந்த பேட்டியில் வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன். அதன்பொருட்டு அவரைச் சந்தித்தாக வேண்டும் என ஆர்வம் மேலிட சிலைமானில் உள்ள அவரது வீட்டிற்கு நான் வந்தேன். நானும் ஒரு ஆசிரியரின் மகன் என்ற முறையில் பாலசுப்பிரமணியத்தோடும், அவரது துணைவியார் ஆசிரியர் சுபத்ராவோடும் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியுலகுக்கு ஆசிரியர் பாலசுப்பிரமணியத்தை முழுதாக நாம் கொண்டு சேர்க்கவில்லை.

வரலாற்றை வெளிக்கொண்டு வந்த வரலாற்றை நாம் முதலில் வெளிக்கொணர வேண்டும். ஆசிரியர் பாலசுப்பிரமணியத்துக்கு கூடிய விரைவில் விழா எடுத்து சிறப்பிக்க வேண்டும் என்பதே எனது ஆவல். அந்த விழாவில் வரலாற்று விற்பன்னர்களை, சமூகக் கண்ணோட்டத்துடன் கூடிய பெரியவர்களை பங்கேற்க வைத்து ஆசிரியர் பாலசுப்பிரமணியத்துக்கு கௌரவம் சேர்க்க வேண்டும். அரசு அவையில் பதிவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையுமானால் நிச்சயமாக அதையும் செய்வேன். அதனையே ஆசிரியருக்கு நான் தருகின்ற முக்கிய மரியாதையாக எண்ணிக் கொள்கிறேன்' என்றார்.

Tags

Next Story