ஓட்டலில் பெண்கள் கழிவறையில் வீடியோ எடுத்த வாலிபர் கைது

ஓட்டலில் பெண்கள் கழிவறையில்  வீடியோ எடுத்த வாலிபர் கைது

 வீடியோ எடுத்த வாலிபர் கைது 

சேலத்தில் தனியார் ஓட்டலில் பெண்கள் கழிவறையில் செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது. போலீசார் நடவடிக்கை.
சேலம் சூரமங்கலம் மெயின் ரோட்டில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா அருகே தனியார் ஓட்டல் முன்பு ஒரு ஆம்னி பஸ் நின்றது. அதில் இருந்து பெண் பயணி ஒருவர் கீழே இறங்கி கழிவறைக்குள் சென்றார். இதையடுத்து அவர் திடீரென அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார். கழிவறைக்குள் செல்போன் இருப்பதாகவும், அதன்மூலம் வீடியோ பதிவு செய்வதாகவும் ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்த தனது கணவரிடம் தெரிவித்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஓட்டலில் உள்ள கழிவறையின் மேல்பகுதியில் துணியில் சுற்றியபடி செல்போன் ஒன்று இருப்பதும், அதனை எடுத்து பார்த்தபோது அந்த செல்போனில் வீடியோ பதிவாகி கொண்டிருப்பதும் தெரியவந்தது. சுமார் 1½ மணி நேரம் அந்த செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் கழிவறையின் தூய்மை பணியாளரான சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த விஜய் (வயது 20) என்பவர் செல்போனை கழிவறையில் வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த செல்போனில் பெண்களின் வீடியோ ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story