ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு!

ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு!

போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த ஈச்சந்தாங்கல் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் கோபி (28), விவசாயி. இவர், சம்பவத்தன்று கிராமம் அருகே உள்ள காவேரிப்பாக்கம் ஏரியில் மீன்பிடிக்க செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் கோபி வீட்டிற்கு திரும்பி வராததால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஏரி கரையில் கோபி அணிந்திருந்த லுங்கி மற்றும் இருசக்கர வாகனம் இருப்பதை கண்டனர்.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏரியில் இறங்கி கோபியை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஏரியில் தேடினர்.

ஆனாலும் உடல் கிடைக்கவில்லை. பின்னர் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் ஏரியில் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கோபியின் உடலை மீட்டனர். இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story