கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

கோப்பு படம் 

கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். இவர் திருவண்ணாமலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தானிப்பாடி காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் போலீசார் வழக்குபதிந்து மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து தேடி வந்தனர். இதில் மாணவி திருவண்ணாமலையில் இருப்பது நேற்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், வேட்டவலம் கிராமத்தை சேர்ந்த ஓட்டலில் கூலி வேலை செய்யும் கமல்(27) என்பவர், இன்ஸ்டாகிராமில் மாணவியுடன் பழகி காதல் வலை விரித்தது தெரியவந்தது.

பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கமல் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story