டீக்கடையில் டீ போட்டு கொடுத்து தங்கதமிழ்செல்வன் வாக்கு சேகரிப்பு !
தங்கதமிழ்செல்வன்
இந்த முறை மோடி பிரதமராக வரமாட்டார். ஸ்டாலின் சொல்பவர் தான் பிரதமராக வருவார் என பிரச்சாரம் மேற்கொண்ட தங்க தமிழ் செல்வன். வரும் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு செய்த பின்னர் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான ஆதிபட்டி, வாழையாத்துப்பட்டி பூதிப்புரம் மஞ்சிநாயக்கன்பட்டி கெப்புரெங்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய தங்க தமிழ்செல்வன் வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். ஆட்சிமாற்றம் வரும் மோடி பிரதமராக வரமாட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் சொல்பவர் தான் பிரதமராக வருவார்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது போல சமையல் சிலிண்டர் விலை ரூபாய் 500 க்கு வழங்கப்படும், பெட்ரோல் விலை ரூபாய் 75 மற்றும் டீசல் விலை ரூபாய் 65 க்கு வழங்கப்படும். மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது, கிடைக்கப் பெறாதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிலிண்டரின் விலை ரூபாய் 600 மட்டுமே மோடி ஆட்சியில் ரூபாய் 1,100 க்கு விற்கப்பட்டது. மோடி சர்க்கார் விவசாய கடன், கல்விக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்யவில்லை ஆனால் பெரும் முதலாளிகளின் 2 லட்சத்தி 50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. முதலாளிகளுக்கான அரசு தான் மோடி அரசு. தேர்தலுக்காக மட்டும் இப்ப மோடி தமிழ்நாடு வருகிறார் ஒரு பலனும் இல்லை. பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு கிடையாது பணக்காரர்களுக்கான அரசு என பாஜக அரசை விமர்சித்தார். இதையடுத்து அங்கிருந்த டீக்கடையில் டீ போட்டு கொடுத்து தங்கதமிழ்செல்வன் வாக்கு சேகரித்தார்.