வீட்டின் கதவை உடைத்து 21 பவுன் தங்க நகைகள் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 21 பவுன் தங்க நகைகள் கொள்ளை
கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 21 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மா்ம நபா்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா், வீரபாண்டியன்பட்டினம், சிவந்தி நகரைச் சோ்ந்த அருணாசல பிரகாஷ் மகன் சதீஷ் (41). தனியாா் நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறாா். மேலும் வீட்டின் மாடியில் பினாயில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறாா். சதீஷ் கடந்த 22ஆம் தேதி பிற்பகலில் தனது குடும்பத்துடன் சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளாா். அப்போது நள்ளிரவு ஆன காரணத்தினால் உளுந்தூா்பேட்டையில் தனியாா் விடுதியில் தங்கி உள்ளாா். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் வேலைக்கு வரக்கூடிய 2 பெண்கள் வீட்டின் முன் கதவு உடைந்து இருப்பதாக சதீஷுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சதீஷ் தனது கைப்பேசி மூலம் வீட்டின் சிசிடிவி கேமராவை சோதனை செய்துள்ளாா். அப்போது கடந்த 22ஆம் தேதி இரவு மா்மநபா் ஒருவா் முகமூடி அணிந்து, கையில் உறை அணிந்து இரும்பு கம்பியால் வீட்டின் முன் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊருக்கு திரும்பிய சதீஷ், வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்த 21பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 54 ஆயிரம் திருடப்பட்டது தெரிய வந்தது. புகாரின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story