மகன்கள் துன்புறுத்தியதாக கூறி தந்தை தீக்குளிக்க முயற்சி

மகன்கள் துன்புறுத்தியதாக கூறி தந்தை தீக்குளிக்க முயற்சி

தீக்குளிக்க முயன்றவர்

மகன்கள் துன்புறுத்தியதாக கூறி தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் தாலுகா, கடம்பத்துார் அடுத்த கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர், பாலசுந்தரம் மகன் பாலாஜி, 58. இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு, 21 மற்றும் 19 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், 20 ஆண்டுக்கு முன் லலிதா இறந்து விட்டார்.

இதையடுத்து, பாலாஜி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கூலி வேலை பார்த்து வரும் இவரை, அவரது மகன்கள் இருவரும், அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து, பாலாஜி மப்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பாலாஜி, தன் இரண்டாவது மனைவியுடன், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் கார் நிறுத்தும் இடத்திற்கு செல்லும் இடத்தில், திடீரென தான் கொண்டு வந்த, பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றிக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 'க்யூ' பிரிவு போலீசார், பெட்ரோல் பாட்டிலை கீழே தட்டி விட்டு, அவர்களை பாதுகாக்க முயற்சித்தனர்.

அருகில் இருந்தவர்கள், தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து, பாலாஜி உடலில் ஊற்றினர். தகவல் அறிந்ததும், திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து, பாலாஜியை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story