சேலத்தில் பயங்கரம்: மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை !

மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவன் ஆத்திரம் அடைந்து கத்தியால் அறுத்து கொலை செய்தவரை போலிசார் கைது செய்தனர்.
சேலம் வீராணம் அருகே உள்ள வலசையூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 65). இவருடைய மனைவி பெரியம்மா (60). கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். ரவிச்சந்திரன் தினமும் மது குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவரை விட்டு பிரிந்து பெரியம்மா வாய்க்கால்பட்டறை பகுதியில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்தார். மேலும் வ.உ.சி. மார்க்கெட் பின்புறம் உள்ள வால்மீகி தெரு பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இதை தெரிந்து கொண்டு ரவிச்சந்திரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு சென்று மனைவியிடம் தகராறு செய்தார். இதை தொடர்ந்து நேற்று இரவு மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கத்தியை எடுத்து மனைவியை குத்த முயன்றார். அப்போது அவர் உயிர் பிழைக்க அருகில் உள்ள மாடிப்படியில் ஏறினார். ஆனால் பின் தொடர்ந்து சென்ற அவர் மனைவியை கீழே தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்த ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

Tags

Next Story