கணவர், மகள் இறந்த விபத்தில் காயமடைந்த பெண் மூளைச்சாவு !

கணவர், மகள் இறந்த விபத்தில் காயமடைந்த பெண் மூளைச்சாவு !

பெண் பலி

புதுக்கோட்டையில் கணவர், மகள் இறந்த விபத்தில் காயமடைந்த பெண் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.
புதுக்கோட்டையில் கணவர், மகள் இறந்த விபத்தில் காயமடைந்த பெண் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தேரடித் தெருவைச் சேர்ந்த கண்ணையன் மகன் சுப்பிரமணியன், அவரது மனைவி சுஷ்மிதா (26), மகள் ஹரிணி(4) யுடன் புதுக்கோட்டை பெரியார் நகரில் வசித்து வந்தார்.ஞாயிற்றுக்கிழமை இரவு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு, வீடு திரும்பும்போது மாவட்ட ஆட்சியரகம் அருகே, புதுக்கோட்டையிலிருந்து சென்னை நோக்கிச்சென்ற தனியார் பேருந்து மோதி சுப்பிரமணியனும், ஹரிணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த சுஷ்மிதா, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு மூளைச் சாவு அடைந்த சுஷ்மிதாவின் உடல்உறுப்புகளை தானம் அளிப்பது தொடர்பாக மருத்துவர்கள் அவரது உறவினர்களுக்கு எடுத்துக் கூறினர். இதைத்தொடர்ந்து, அவர்கள் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சுஷ்மிதாவின் கல்லீரல், இருதயம், தோல் கார்னியா, சிறுநீரகம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு உரிய பாதுகாப்புடன் சென்னைக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுஷ்மிதாவின் சடலம் அவரது கணவரின் சொந்த ஊரான விராலிமலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு சார்பில் கோட்டாட்சியர் தெய்வநாயகி, வட்டாட்சியர் கருப்பையா ஆகியோர் சுஷ்மிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் உறவினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story