வெள்ளி வியாபாரியை காரை ஏற்றிக் கொன்ற மைத்துனரை போலீசார் கைது செய்தனர்

மகன்களை பார்க்க தடையாக இருந்ததால் காரை ஏற்றிக் கொன்ற மைத்துனர்.இது குறித்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). வெள்ளி வியாபாரி. இவர் கடந்த 2-ந்தேதி காலை அந்த பகுதியில் உள்ள கடையில் பால் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது கார் மோதி சங்கர் பரிதாபமாக இறந்தார். சங்கரின் இறப்பு விபத்து என கூறப்பட்ட நிலையில் அவர் மீது கார் மோதிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து வெள்ளி வியாபாரிகள், சங்கர் கொலை செய்யப்பட்டதாக செவ்வாய்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது பதிவு எண் இல்லாத ஒரு கருப்பு நிற கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த கார் குறித்து விசாரணை நடத்தினர். அந்த காரில் பதிவு எண் இல்லாததால் அதுபற்றிய முழுவிவரம் போலீசாருக்கு தெரியவில்லை. இருந்தாலும் சங்கருக்கு யாருடன் எல்லாம் பகை உள்ளது என்பது குறித்த தகவல்களை போலீசார் திரட்டினர். அப்போது அவர், மைத்துனருடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சங்கரின் மைத்துனர் சுபாஷ்பாபுவை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். முதலில் சங்கர் இறப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய சுபாஷ்பாபு, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சங்கரை கூலிப்படை மூலம் காரை ஏற்றி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். போலீசில் சுபாஷ்பாபு அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:- நான், சங்கரின் தங்கை விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக நான் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். என்னுடைய மனைவி, மகன்கள் சங்கரின் வீட்டில் இருக்கிறார்கள். நான் அவர்களை சந்திக்க முயற்சி செய்தேன். குறிப்பாக என்னுடைய மகன்களை பார்த்து பேச வேண்டும் என்று பலமுறை முயன்று இருக்கிறேன். ஆனால் சங்கர் அதனை தடுத்து விடுவார். என்னுடைய மகன்களை என்னிடம் பேச விடாமல் செய்து விடுவார். மனைவி பிரிந்து செல்லவும், மகன்களை பார்க்க முடியாமல் போனதற்கும் காரணமான சங்கர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சங்கர் இல்லையென்றால்தான் மகன்களை பார்த்து பேச முடியும் என்று நான் நினைத்தேன். அதற்காக நண்பர்கள் சிலரிடம் யோசனை கேட்டேன். அதன்படி கூலிப்படையை ஏவி சங்கரை தீர்த்துக்கட்டினேன். அதற்காக ரூ.2 லட்சம் அவர்களுக்கு கொடுத்துள்ளேன் இவ்வாறு சுபாஷ்பாபு போலீசாரிடம் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் சங்கர் கொலைக்கு காரணமான சுபாஷ்பாபு கைது செய்யப்பட்டாலும் கூலிப்படையினர் பற்றிய தகவல் இன்னும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

Tags

Next Story