பள்ளி இடைநின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்த்த காவல்துறையினர்

பள்ளி இடைநின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்த்த காவல்துறையினர்

இடைநின்ற மாணவன் பள்ளியில் சேர்ப்பு 

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக சட்ட ஆலோசகர் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் ஆகியோர் இணைந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா என சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மெக்கானிக் கடையில் வேலைபார்த்து வந்த ஒரு மாணவனை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சிறுவனை விசாரித்த போது அவர் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாகவும் குடும்ப சூழ்நிலை காரணமாக 11 -ம் வகுப்பு படிக்காமல் பள்ளியில் இருந்து பாதியில் நின்றுவிட்டதாகவும் குடும்பத்தின் வறுமை காரணமாக தற்போது பணி செய்துவந்ததாகவும் கூறிய நிலையில் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக சட்ட ஆலோசகர் கோபிநாத் ஆகியோர் இணைந்து சிறுவனை நேற்று மீண்டும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்த்துள்ளனர். இச்செய்தியறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவினர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களை வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story