வாலிபர் இறப்பில் சந்தேகம்?
![வாலிபர் இறப்பில் சந்தேகம்? வாலிபர் இறப்பில் சந்தேகம்?](https://king24x7.com/h-upload/2024/06/15/550169-death.webp)
பலி
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் கோடப்பமந்து கால்வாயில் செல்லும் மழை நீர் ஊட்டி படகு இல்லத்தை சென்றடையும். ஆண்டுக்கு 24 மணி நேரமும் இந்த கால்வாயில் தண்ணீர் செல்லும் என்பதால் சமீபத்தில் நகராட்சி நிர்வாகம் இந்த கால்வாயை தூர்வாரியது. இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் வாலிபர் ஒருவர் ஊட்டி உழவர் சந்தை அருகில் கோடப்பமந்து கால்வாய் அருகே வந்து நின்றார்.
திடீரென்று அந்த வாலிபர் கோடப்பமந்து கால்வாயில் விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸார் வந்து அந்த வாலிபரை மீட்டபோது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. மருத்துவ குழுவினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. ஆனால் வட மாநில வாலிபர் போல் தோற்றமுள்ள அவர் ஊட்டி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார் என்பது தெரியவந்தது. ஆனாலும் அவர் குறித்து முழு விவரம் தெரியவில்லை. மேலும் அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.