'ஜன்மன்' திட்டத்தில் இருளர்களுக்கு வீடு கட்டும் பணி தீவிரம்

ஜன்மன் திட்டத்தில் இருளர்களுக்கு வீடு கட்டும் பணி தீவிரம்

வீடு கட்டும் பணிகள் 

உத்திரமேரூர் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்டும் பணி துவங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாரத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய இருளர்கள், ஓலைக் குடிசைகளில் வசித்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் இருளர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதைத் தவிர்க்க, அரசு சார்பில் இருளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படுகிறது.

ஏற்கனவே, உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில், 178 இருளர் குடும்பத்தினருக்கு, 8.22 கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டி பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியினர் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து, உத்திரமேரூர் ஒன்றியத்தில் 2024- - 25ம் ஆண்டுக்கு, தற்போது, காரியமங்கலம், கருவேப்பம்பூண்டி, நாஞ்சிபுரம், பென்னலுார், அரும்புலியூர், பழவேரி உள்ளிட்ட கிராமங்களில், 'ஜன்மன்' திட்டத்தின் கீழ், 77 குடும்பங்களுக்கு, தலா 5.7 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதே போன்று, ஆதவப்பாக்கம், சிலாம்பாக்கம், மானாம்பதி, பெருநகர், மருத்துவன்பாடி, குன்னவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 73 இருளர்களுக்கு, பழங்குடியினர் தொகுப்பு வீட்டு திட்டத்தின் கீழ், தலா 4.63 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டுமான பணி நடைபெறுகிறது. வீடு கட்டுமான பணி முழுமையாக நிறைவு பெற்றதும் அக்குடியிருப்பு பகுதியில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story