ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு

ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு

ஆசிரியை வீட்டில் திருட்டு

அரக்கோணத்தில் பட்டப்பகலில் ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம் ஜோதி நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பிரதீப். சென்னை முத்தியால்பேட்டை அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. பூந்தமல்லி கரையான் சாவடி அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறார். நேற்று காலை 2 பேரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது மகள் படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிரதீப்பின் மாமியார் வீட்டின் ஹால் பகுதியில் தூங்கினார்.

பிரதீப்பின் மகள் மாலை 3 மணி அளவில் படுகையறையில் தூங்கிக்கொண்டிருந்தார். ஹால் பகுதியில் தூங்கிய மூதாட்டி திடீரென விழித்து பார்த்தபோது வீட்டின் மற்றொரு படுக்கை அறையில் மின் விசிறி ஓடியது. மின்விளக்கும் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து தனது பேத்தியிடம் எதற்காக பகலில் விளக்கு எரிகிறது என்று கேட்டுள்ளார்.உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது பீரோ திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பீரோவில் இருந்த செயின், வளையல், மோதிரம் என சுமார் 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நகைகள் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து பிரதீப் அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story