திருப்பூரில் மார்ச் மாதத்திற்கான நூல் விலை ரூ 5 உயர்வு

திருப்பூரில் மார்ச் மாதத்திற்கான நூல் விலை ரூ 5 உயர்வு

 நூல் விலை

மார்ச் மாதத்திற்கான நூல் விலை ரூ. 5 உயர்வு. தொழில் துறையினர் அதிர்ச்சி.

திருப்பூர் மார்ச் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் தொழில்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பிவைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. நடப்பு மாதத்திற்கான (மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன.

இதில் நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202க்கும், 20-வது நம்பர் ரூ.260-க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர், ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story