வழிப்பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட மூவர் கைது !

திருத்தணி அருகே வழிப்பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட மூவர் கைது. போலீசார் விசாரணை
திருத்தணி ஒன்றியத்தில் தனியாக நடந்து செல்பவர்கள், சாலையோரம் மற்றும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து மது குடிப்பவர்களிடம் மூன்று மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று, கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை மற்றும் மொபைல் போன்கள் பறித்து வந்தனர். இதனால் திருத்தணி மக்கள் பீதியடைந்தனர். இரு நாட்களுக்கு முன் டி.சி.கண்டிகையில் சாலையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இரு வாலிபர்களிடம், மேற்கண்ட அதே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஒருவரின் இடது கை தோள்பட்டையில் கத்தியால் வெட்டிவிட்டு, மூன்று மொபைல்போன்களை பறித்து சென்றனர். ஒரு வாரத்தில் மட்டும், 10க்கும் மேற்பட்டவர்களின் மொபைல் போன்கள், பணம் ஆகியவற்றை பறித்து தப்பினர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, திருத்தணி அருகே பதுங்கியிருந்த ஒரு சிறுவன் உள்பட மூன்று வாலிபர்களை பிடித்து, மூன்று மொபைல்போன்கள், 3 சவரன் தங்க நகை மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள்தான் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்றும், திருத்தணி ஜோதி நகர் முகேஷ், 23, மற்றும் 17 வயது சிறுவன், காசிநாதபுரம் சூர்யா, 23, என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story