திபெத் எழுச்சி தினம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் திபெத் எழுச்சி தினத்தை முன்னிட்டு திபெத்தியர்கள் அமைதி பேரணி நடத்தினர்.
கடந்த பல ஆண்டுகளாக திபெத்தை சீனா ஆக்கிரமித்து அதன் ஆதிக்கத்தின் கீழ் வைத்து உள்ளது. இதனிடையே திபெத்தில் சீனாவின் அத்துமீறல்களால் ஏராளமான திபெத்தியர்கள் இறந்து உள்ளனர். திபெத்திற்கு சுதந்திரம் தர வேண்டியும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சீனாவின் அடக்கு முறையால் திபெத் சீன ஆதிக்கத்தின் கீழ் வந்த பிறகு பெரும்பாலானவர்கள் திபெத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அகதிகளாக குடியேறி விட்டனர். இவர்கள் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஊட்டி, கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்கள் நிறைந்த மாவட்டங்களில் சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவாறு அங்கேயே தங்கி உள்ளனர். இதேபோல் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் 100-க்கும் மேற்பட்ட திபெத் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் ஆண்டுதோறும் மார்ச் 10ம் தேதி திபெத் எழுச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. திபெத்தியர்கள் பங்கேற்ற அமைதி பேரணி ஊட்டியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற திபெத்தியர்கள் சீனாவிற்கு எதிராக போராடி உயிரிழந்த திபெத்தியர்களின் நினைவாகவும், சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து திபெத்திற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். தாவரவியல் பூங்கா அருகே தொடங்கிய பேரணி எட்டின்ஸ் சாலை, ஏ.டி.சி., திடல் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தாவரவியல் பூங்கா அருகே நிறைவடைந்தது.

Tags

Next Story