திருப்பூர்: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி
திருப்பூர் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் இன்று (ஜூன் 18) மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கோயில்களில் உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் மற்றும் தமிழக அரசும் இதுகுறித்து கொஞ்சமும் கவலை கொள்வதாக தெரியவில்லை.
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே இரவில் மட்டும் 8 கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. கோயில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பது அல்ல பிரச்சினை, கோயிலை குறிவைத்து நடக்கும் குற்ற செயல்கள், நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.
முகூர்த்த நாட்களில் திருமணம் நடக்கும் திருமண மண்டபங்களில் கூட சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ள நிலையில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபடக்கூடிய கோயில்களில் பல லட்சம் மதிப்பிலான விக்ரகங்கள், தங்க அலங்கார நகைகள் உள்ளன. மேலும் காணிக்கை உண்டியல் இருக்கும் இடத்தில் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? கோவில் பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா பொருத்தப்ட வேண்டும்,தமிழக காவல்துறை சார்பில் கோயில் பாதுகாப்பு காவலர்கள் என பிரத்யேகமான காவல்படை உருவாக்கப்பட வேண்டும்.
அதில் திறமையான, இந்து சமய நம்பிக்கை உடைய, சுயநலமில்லாத நபர்கள் சேர்க்கப்பட வேண்டும். தகுதியற்றவர்கள் இந்து சமய நம்பிக்கை இல்லாதவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படக்கூடாது. தொடர் கோயில் திருட்டு, கொள்ளையில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
