தமுமுக-மமக தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்  

மல்லிப்பட்டினத்தில் தமுமுக-மமக தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முகமது இல்யாஸ், சாகுல் ஹமீது, முகமது சேக் ராவுத்தர், ஹாஜா மைதீன், இத்ரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மமக மாநில துணைச் செயலாளர் தஞ்சை பாதுஷா, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில செயலாளர் திருச்சி ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்கள் கேடயம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மேலும், பொதுக்குழுவில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில், தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக - மமக தலைவராக மதுக்கூர் ஃபவாஸ், தமுமுக மாவட்ட செயலாளராக அதிரை அப்துல் மாலிக், மமக மாவட்ட செயலாளராக மல்லிபட்டினம் ஃபஹத், தமுமுக - மமக மாவட்ட பொருளாளராக பட்டுக்கோட்டை ஜெகபர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிறைவாக மமக மாவட்டச் செயலாளர் அப்துல் பகத் நன்றியுரையாற்றினார்.

தமுமுக-மமக தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம். தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெரு, காயிதே மில்லத் நகர், நொண்டித் தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள பகுதிகளை, சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் இணைக்க வேண்டும். மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெரு-புதுமனைத்தெரு இடையே உள்ள பகுதிகளில் குளங்களில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி, பூங்கா அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். கிழக்கு கடற்கரை சாலைகளில் தெருவிளக்குகள் ஒளிராமல் இருட்டாக இருப்பதால், இதனை சரிசெய்ய வேண்டும்.

அதிராம்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்து தரவேண்டும். அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டுக்கோட்டை மக்களின் நீண்டநாள் கோரக்கையான பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பட்டுக்கோட்டையில் அரசு சட்டக்கல்லூரி அமைத்திட வேண்டும். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மதுக்கூரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணிநேரமும் செயல்பட வேண்டும். மதுக்கூரில் பல வருடங்களாக பயன்பாட்டில் இருந்த ஒரு வழிப்பாதை சில தினங்களாக பயன்பாட்டில் இல்லை.

இதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அனைத்து வாகனங்களும் ஒரு வழிப்பாதையில் இயங்க வேண்டும். மதுக்கூர் இடையக்காட்டில் அமைந்துள்ள பால் கொள்முதல் நிலையம், பொதுமக்களுக்கு இடையூறாகவும், தொற்று நோய் ஏற்படும் அபாய சூழல் இருந்து வருகிறது. ஆதலால் அதனை வேறு இடத்திற்கு மாற்றி தரவேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story