காங்கேயம் ஸ்டான்டில் நின்ற காருக்கு திருச்சி டோல்கேட்டில் பணம் வசூலிப்பு

காங்கேயம் ஸ்டான்டில் நின்ற காருக்கு திருச்சி டோல்கேட்டில் பணம் வசூலிப்பு
காங்கேயம் கார் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்திருந்த காருக்கு திருச்சி டோல்கேட்டில் பணம் எடுக்கப்பட்டதால் உரிமையாளர் அதிர்ச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு‌ மருத்துவமனை வளாகம் முன்புறம் காங்கேயம் வாடகை கார்‌ மற்றும் டெம்போ ஸ்டான்ட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் டிபோர்டு என கூறப்படும் வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு கடந்த 25 ஆண்டுகளாக சொந்தமாக கார் வைத்து சுற்றுலா மற்றும் வாடகை கார்‌ ஓட்டும் படியாண்டிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் வயது 51 . இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் வழக்கம் போல் கார் ஸ்டான்ட்க்கு தனது காரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு வாடகை சவாரிக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது சுமார் 11 மணி அளவில் அவரது தொலைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை படித்த மகேந்திரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அருகில் இருந்த மற்ற கார் ஓட்டுநர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த ஓட்டுநர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காங்கேயம் கார் ஸ்டான்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு திருச்சி மாவட்டம் பொன்னம்பலம் பட்டி பிளாசா சுங்கச்சாவடியை கடந்ததாக கூறி ரூ. 125 கட்டணமாக‌ வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் ஓட்டுநர் தெரிவித்ததாவது: சுமார் 5 மணி நேரமாக வாடகைக்காக காத்துக் கொண்டுள்ளேன். காலை 7 மணி முதல் 11 மணி வரை காரை எடுக்கவே இல்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் காங்கேயம் பகுதியில் இருக்கும் காருக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னம்பலம் பட்டி பிளாசா சுங்க சாவடியில் கட்டணம் ரூ. 125 வசூல் செய்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அனைத்து வாகனங்களின் பாஸ்டாக் அட்டைகளில் இருந்தும் முறைகேடாக கட்டணம் வசூலிப்பது மிகப்பெரிய கொள்ளையாகும். நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தை எளிமையாக்கவே இந்த டிஜிட்டல் முறை சுங்கச் சாவடி கட்டணம் செலுத்தும் ஸ்டிக்கர்கள் வாகன முன்பக்க கண்ணாடிகளில் ஒட்டப்படுகிறது. ஆனால் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிற்கும் காருக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் இயந்திரம் ஸ்கேன் செய்து பணத்தை எடுத்தது மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இது குறித்து நாங்கள் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மேலும் இணையவழி மூலமாகவும் புகார் அளித்துள்ளோம். இது குறித்து காவல்துறை உடனடியாக ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெற்ற பணத்தை திரும்ப வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் காங்கேயம் வாடகை வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Read MoreRead Less
Next Story