மொழிபெயர்ப்பு ஆய்வுகள்: பன்னாட்டுக் கருத்தரங்கம்
கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளர் தமிழ்க் கருத்தரங்கக் கூடத்தில் “மொழிபெயர்ப்பு ஆய்வுகள்” என்னும் கருப்பொருளில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கின் முதல்நாள் புதன்கிழமை, வியாழக்கிழமை இரு நாட்கள் நடைபெற்றது.
வளர் தமிழ்ப்புல முதன்மையர் இரா.குறிஞ்சிவேந்தன் தலைமை வகித்தார். கலைப்புல முதன்மையர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்(பொ) பெ.இளையாப்பிள்ளை வாழ்த்திப் பேசினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், மொழிபெயர்ப்புத்துறை உதவிப்பேராசிரியர் சா.விஜயராஜேஸ்வரி வரவேற்றார். மொழிபெயர்ப்புத் துறையின் தலைவர் இரா.சு.முருகன் நோக்கவுரையாற்றினார். மொழிபெயர்ப்புத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் இராமமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வாக, தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் பதிவாளர் கு.வெ.பாலசுப்பிரமணியன் “மொழிபெயர்ப்பின் இன்றியமையாமை” பொருண்மையில் உலக இலக்கியங்களில் மொழிபெயர்க்கப்படும் மொழிபெயர்ப்புகள் எந்த அளவில் சிறந்து விளங்குகின்றன.
அவற்றில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்குத் தெளிவான உரையை வழங்கினார். இரண்டாம் அமர்வில் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக உயிரித் தொழில்நுட்பவியல் துறை முதுநிலை ஆராய்ச்சியாளர்,
அம்ஜென் நிறுவன முதுநிலை ஆய்வாளர் முனைவர். பழனிச்சாமி இரத்தினசாமி “மொழிபெயர்ப்பில் ஆங்கில மொழி பயன்பாடும் உயிரியல் பாட மொழிபெயர்ப்பும்” என்னும் பொருண்மையில் மொழிபெயர்ப்பின் இலக்கணக் கூறுகளையும் சிக்கல்களையும் தீர்வுகளையும் கூறிப் பேசினார். இந்த நிகழ்ச்சியை மொழிபெயர்ப்புத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் விவேதா மாறன், இலக்கியத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் சு.மஞ்சு தமிழ், ஆங்கிலம் என்ற நிலையில் தொகுத்து வழங்கினர்.