தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் கேத்லேப் பிறவி இதய குறைபாடுக்கு சிகிச்சை

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் கேத்லேப் பிறவி இதய குறைபாடுக்கு சிகிச்சை
பிறவி இதய சிகிச்சை 
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் முதல் முறையாக கேத்லேப் மூலம் பிறவி இதய குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை இல்லாமல் கேத்லேப் மூலம் பிறவிலேயே ஏற்பட்ட இதய குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறவிலேயே இதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கேத்லேப் (இதய உட்செலுத்தி கதிரியக்க ஆய்வுக்கூடம்) சரி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சிகிச்சை கடந்த 2 வாரங்களில் 6 பேருக்கு அளிக்கப்பட்டது. முதலில் 3 குழந்தைகளுக்கு பெரிய ரத்தக் குழாயில் இருந்த குறைபாடு சரி செய்யப்பட்டு, தற்போது மூவரும் நலமாக உள்ளனர். இதேபோல, மே 13 ஆம் தேதி தலா ஒரு குழந்தை, பெண், ஆண் ஆகிய மூவருக்கும் இதயத்தில் உள்சுவர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு, கேத்லேப் மூலம் அரை மணிநேரத்தில் சரி செய்யப்பட்டது. இதன் மூலம், பெரிய அறுவை சிகிச்சையை செய்யாமல், குணப்படுத்தப்பட்டது.

இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவாகும். மேலும், மருத்துவமனையில் ஒரு வாரம் முதல் 10 நாள்களுக்கு தங்க வேண்டும். ஆனால், கேத்லேப் சிகிச்சை மூலம் அரை மணிநேரத்தில் சிகிச்சை முடிக்கப்பட்டு, 2 நாள்கள் மட்டுமே மருத்துவப் பராமரிப்பில் இருந்து, விடுவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பிறவிலேயே ஏற்பட்ட இதய குறைபாடுக்கு கேத்லேப் மூலம் இயல்பான நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை மேற்கொண்ட இதயவியல் துறைத் தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவக் குழுவினரை பாராட்டுகிறேன்.

டெங்குவுக்கு தனி வார்டு: இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் தொடர்பாக கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை டெங்கு அதிகரிக்கவில்லை. என்றாலும், டெங்குவுக்கான 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீர், ஓ.ஆர்.எஸ். கரைசல், மருந்து, மாத்திரைகள் போன்றவை தயாராக உள்ளன" என்றார் பாலாஜிநாதன். அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளர் சி.ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் ஏ.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story