உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

பேராவூரணி பேரூராட்சி சார்பில், உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நாம் வாழும் பூமிப் பந்தினையும், இயற்கையையும் காப்பாற்ற, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, செயல் அலுவலர் ராஜா தலைமையில் விழிப்புணர்வு பேரணி அண்ணா சிலை வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து பேராவூரணி பெரியகுளக்கரை, நீலகண்ட பிள்ளையார் ஆலய தெப்பக்குளம், நவீன எரிவாயு தகனமேடை வளாகம், பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, எரிவாயு தகனமேடை வளாகம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் முன்னிலை வகித்தார். வர்த்தக சங்க தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் சாதிக் அலி, பேரூராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சிவசுப்பிரமணியன், மகளிர் சுய உதவிக் குழுவினர், பரப்புரையாளர்கள், டெங்கு பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story