திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

திருச்சியில் நிதி குழு தலைவர் முத்துச்செல்வம் மாநகராட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. 2024-2025 ஆம் ஆண்டிற்கான திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி நிதி குழு தலைவர் முத்துச்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து அதை வாசித்தார். அதில் 2023 – 2024 ஆம் ஆண்டில் மாநகராட்சியில் நடந்து முடிந்த பணிகளை பட்டியலிட்டார். தொடர்ந்து 2023-2024 ஆம் ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள பணிகளை வாசித்தார்.

அதில் குறிப்பாக, திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருக்கும் கூடம் கட்டும் பணி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த சந்தை அமைக்கும் பணி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு கட்டிடம் கட்டும் பணி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் வசதிகள் வழங்குவது மற்றும் புதை வடிகால் வசதிகள் வழங்கும் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு, உய்யக்கொண்டான் வாய்க்காலை தூய்மைப்படுத்த புதை வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அந்தத் திட்டம் முடிவடைந்த பின்பு உயக் கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது தடைப்படும்.

அவ்வாறு தடைபடாத இடங்களில் சிறிய அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் ஏற்படுத்தி அப்பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீரை தடுத்து புதை வடிகால் குழாய்களுக்கு செல்லும் வகையில் மாற்றி அமைத்து உயக் கொண்டான் வாய்க்காலை தூய்மைப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படும், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதை வடிகால் குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டால் அடைப்புகளை உடனடியாக நீக்குவதற்கு குறிப்பிட்ட இடங்களில் புதைவடிகால் ஆய்வு அமைப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

திருச்சி மாநகராட்சியில் தற்பொழுது 135 MLD அளவு குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் அது தங்குதடையின்றி பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையிலும் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்கும் காவிரி ஆற்றில் புதிதாக 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story