திருவண்ணாமலை வழியாக வாரமிருமுறை ரயில்

திருவண்ணாமலை வழியாக வாரமிருமுறை ரயில்

திருவண்ணாமலை வழியாக மேற்கு வங்க மாநிலம் புருலியாவுக்கு வாரம் இருமுறை ரயில் இயக்கப்பட உள்ளது.


திருவண்ணாமலை வழியாக மேற்கு வங்க மாநிலம் புருலியாவுக்கு வாரம் இருமுறை ரயில் இயக்கப்பட உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் திருவண்ணாமலை வழியாக மேற்கு வங்க மாநிலம் புருலியாவுக்கு வாரம் இரு முறை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திருவண்ணாமலைக்கு நேரடியாகச் செல்ல இயலாமல் தவித்து வந்த நிலையில், தற்போது நெல்லையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் புருலியா வரை இயக்கப்பட உள்ள வாரம் இரு முறை ரயில், அண்ணாமலையார் பக்தர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.22605 / 22606 என்ற எண்ணுள்ள விழுப்புரம் – புருலியா மற்றும் புருலியா – விழுப்புரம் ரயில்கள் கரக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, கூடூர், ரேனிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வரை இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் என அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து (ABGP) என்ற அமைப்பின் மூலம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு தெற்கு ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து அவ்வமைப்பு வலியுறுத்தியதன் காரணமாக சென்னையிலிருந்து வேலூர் வரை செல்லக்கூடிய ஒரு ரயிலை, பௌர்ணமியன்று மட்டும் கூடுதலாக திருவண்ணாமலை வரை நீட்டித்து அனுமதி அளித்திருந்தார்கள். இந்நிலையில் கரக்பூர்-விழுப்புரம், புருலியா-விழுப்புரம் செல்லக்கூடிய ரயில்களின் கால அட்டடவணையில் சிறிய மாற்றம் செய்து, சென்னை அருகே பெரம்பூர், காட்பாடி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்திலிருந்து திருநெல்வேலி வரை இந்த ரயில்களின் தூரத்தை தெற்கு ரயில்வே வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் விரிவுபடுத்த உள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் வரை விசாகப்பட்டினம், புவனேஸ்வர் வழியாக செல்வதற்கு கூடுதல் ரயில் சேவையாக இது அமைந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் செல்வதற்கு ஹெளரா-கன்னியாகுமரி வாராந்திர ரயில் சேவை மட்டுமே தற்போது உள்ளது. இந்நிலையில் தொடங்கப்பட உள்ள இந்த ரயில் சேவை கரக்பூர் வரை சென்றாலும், அங்கிருந்து கொல்கத்தா 115 கி.மீ. தொலைவுதான். ஆகையால் கரக்பூரிலிருந்து 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும் மின்சார ரயில்களைப் பயன்படுத்தி பயணிகள் கொல்கத்தாசெல்ல முடியும்.அதுமட்டுமன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலை செல்வதற்கான முதல் நேரடி ரயில் சேவையாகவும் இது அமைய உள்ளது. காச்சிகுடா-நாகர்கோவில் ரயில் திருவண்ணாமலை வழியாகச் சென்றாலும்கூட, அது சிறப்பு ரயில் சேவை மட்டுமே. தேவைக்கேற்ப அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு ராமேஸ்வரம்-திருப்பதி ரயில் (16779 / 16780) சேவை இருந்தாலும், அது இரவு நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. மாறாக, புருலியா வரை இயக்கப்படவுள்ள ரயில் சேவை மூலம் அது பகல் நேர சேவையாக மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு அமையும். புருலியா-விழுப்புரம் ரயில் (22605) செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.55 மணிக்கு பெரம்பலூரிலிருந்து புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு மாலை 5.25 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 1.15 மணிக்கும், நெல்லைக்கு 4.10 மணிக்கும் சென்றடையும். விழுப்புரம்-புருலியா ரயில் (22606) புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையிலிருந்து அதிகாலை 3 மணிக்குப் புறப்புட்டு, மதுரைக்கு காலை 5.25 மணிக்கும், திருவண்ணாமலைக்கு பிற்பகல் 12.15 மணிக்கும், பெரம்பூருக்கு மாலை 3.40 மணிக்கும் சென்றடையும். மேற்கு வங்கத்திற்குச் செல்ல விரும்பும் தென் மாவட்ட மக்களுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைவதோடு, பௌர்ணமி நாளன்று கிரிவலம் செல்ல விரும்புகின்ற மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த அண்ணாமலையார் பக்தர்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையாகவும் அமையும். இந்த ரயிலில் முன் பதிவில்லா பெட்டிகள் 3, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி மட்டுமே கொண்ட பெட்டிகள் 10, மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் 2, இரண்டுக்கு ஏசி பெட்டி 1 என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story