வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவர் கைது
இருவர் கைது 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன், 28. இவர், ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி, கங்கை அம்மன் கோவில் தெருவில், தன் நண்பர்களுடன் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 17ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற தமிழரசன், மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த மொபைல் போன், லேப்டாப் திருடப்பட்டது தெரிந்தது.

இதுகுறித்து, கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசில், தமிழரசன் புகார் அளித்தார். கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காரணைப்புதுச்சேரி அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இருவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்தனர். சந்தேகத்தின் பேரில், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது, காரணைப்புதுச்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து, மொபைல் போன், லேப்டாப் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் விசாரணையில், சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த நாகராஜ், 31, பஷீர் கான், 24, என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story