குன்னூரில் கஞ்சா விற்ற இருவர் கைது

குன்னூரில் கஞ்சா விற்ற இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பரிமுதல் செய்தனர்.

கேரள, கர்நாடக மாநில எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதை தடுக்க மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்கள் மற்றும் சோதனை சாவடிகள் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் போலீஸாரின் துணை இல்லாமல் கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதையடுத்து நீலகிரியிலும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குன்னூர் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில். காவல் துணை ஆய்வாளர்கள் மகேந்திரன், விஜயகுமார் தலைமையிலான போலீஸார் குன்னூர் காட்டேரி பிரிவு பகுதியில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வெலிங்டன் பகுதியை சேர்ந்த இமானுவேல் பெலிக்ஸ், சுகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து குன்னூரில் விற்பனை செய்வதும், இமானுவேல் பெலிக்ஸ் இதற்கு முன்னர் வெலிங்டன் காவல் நிலையம் முன்பே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. எனவே குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா விநியோகிக்கும் முக்கிய நபரை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags

Next Story