மோட்டார் சைக்கிள் திருடிய இரண்டு பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய இரண்டு பேர்  கைது

கைது செய்யப்பட்டவர்கள்

கேரளத்தில் இருந்து திருடிக் கொண்டு வரப்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட பைக்குகளை ஆலங்குளம் பகுதிக்கு வந்து மீட்டு 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளம் மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து அண்மைக் காலமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட பைக்குகள் காணாமல் போனதாக போலீசாருக்குப் புகார் சென்றனவாம். இது குறித்து வழக்குப் பதிந்து கொல்லம் மாநகர போலீசார், பைக் திருடர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில், கொல்லம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்றை ஒருவர் திருடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை ஆய்வு செய்த போலீசார், பைக் திருடன், கொல்லம் மாவட்டம் தட்டமால் பகுதியைச் சேர்ந்த அனாஸ்(35) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள தெற்கு மடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் கதிரேசன்(24) என்பவரிடம் திருடிய பைக்குகளை விற்பனை செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து ஆலங்குளம் பகுதிக்கு வந்த கொல்லம் மாநகர போலீசார், ஆய்வாளர் ஹரி லால் தலைமையில் அடைக்கலபட்டணம், தெற்கு மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையிட்டனர். அப்போது, கேரளத்தில் இருந்து திருடி வரப்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட பைக்குகளைப் பறிமுதல் செய்தனர்.

அடைக்கலபட்டணத்தில் பழைய இரும்புக் கடைகளில் சொற்ப விலைக்கு இவை விற்கப்பட்டதும், தொடர்ந்து அதன் உதிரி பாகங்கள் பிரிக்கப்பட்டு விற்கப்படுவதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Tags

Next Story