யானை மிதித்து இருவர் உயிரிழப்பு!

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகம், தேவன் எஸ்டேட்டில் இரவு நேரத்தில் யானைக்கூட்டம் வந்துள்ளது. களப்பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். கூட்டத்திலிருந்து ஒற்றை ஆண் யானை இன்று காலை மீண்டும் எஸ்டேட்டுக்குள் நுழைந்தது. எஸ்டேட் தொழிலாளி, மாதேவ் 50, பம்ப் ஷெட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை யானை தாக்கியது. அதில் பலத்த காயம் அடைந்த மாதேவ் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுமை புலிகள் காப்பகம் அருகே மாயார்‌ பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், மாயார் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் 51, என்பவர் தோட்ட காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது ஆண் யானை தாக்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story