கடத்தல் வழக்கில் விசிக பிரமுகர் உள்பட இருவர் கைது!

கடத்தல் வழக்கில் விசிக பிரமுகர் உள்பட இருவர் கைது!

காவல்துறை

பேரணாம்பட்டு அருகே சரவணன் என்பவரை கடத்திய வழக்கில் விசிக பிரமுகர் உட்பட இருவரை மேல்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (33). இவர் கடந்த 9-ந் தேதி மோட்டார்சைக்கிளில் பேரணாம்பட்டு அருகே பங்களாமேட்டில் இருந்து பல்லலகுப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் சரவணனை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வாயை துணியால் மூடியும், தாக்கியும் காரில் கடத்தி சென்றனர். மேலும் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம், வெள்ளி கை செயின், ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பிடுங்கி, பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, காரில் இருந்து சரவணனை கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சரவணன் வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணனிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு மேல்பட்டி போலீசாருக்கு, எஸ்பி உத்தரவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் பேரணாம்பட்டு அருகே கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த விசிக வேலூர் மண்டல துணை செயலாளர் வேதாச்சலம் (41), பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்த பீர்பால் (41) மற்றும் குடியாத்தத்தை சேர்ந்த குமார், கொத்தபல்லி கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி உள்ளிட்டோர் சரவணனை காரில் கடத்தி சென்றது தெரிந்தது. பின்னர்,வேதாச்சலம், பீர்பால் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள குமார், சின்னத்தம்பி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story