நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து: இருவர் பலி!

நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து: இருவர் பலி!

 வாஞ்சிநாதன், பலராமன்

குடியாத்தம் அருகே நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் நடந்து சென்றவரும், வாகனத்தை ஒட்டி வந்தவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சாமரிஷிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி பலராமன்(38).இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.இவர் பல்லலகுப்பம் கிராமத்தில் நடந்த கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருவிழாவை வேடிக்கை பார்த்து விட்டு தனது கிராமத்திற்கு செல்வதற்காக ஏரிகுத்தி கிராமத்தில் மேல்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி வாஞ்சிநாதன் (27).இவர் மோட்டார் சைக்கிளில் பல்லலகுப்பம் கிராமத்தில் இருந்து ஏரிக்குத்தி கிராமத்தை நோக்கி வந்தார். அப்போது நடந்து சென்று கொண்டிருந்த பலராமன் மீது வாஞ்சிநாதனின் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பலராமனும், வாஞ்சிநாதனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் பலராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.வாஞ்சிநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் விபத்தில் இறந்த பலராமன் உடலை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கும், வாஞ்சிநாதன் உடலை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story