"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" : சாத்தூரில் ஆட்சியர் ஆய்வு

சாத்தூரில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து ஆட்சித்தலைவர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்ட முகாமானது நேற்று காலை 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலக வளாகத்தில், புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பான ஆய்வு மேற்கொண்டும், மேல காந்திபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் கற்பிக்கும் முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உயர்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர், துணைமின் நிலையத்தை பார்வையிட்டு, நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மின் உபகரணங்களை முறையாக பராமரிப்பு செய்து, தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார். சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, நிலையத்தின் செயல்பாடுகள், ஊர்தி மற்றும் உபகரணங்களின் பராமரிப்பு, தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிசிடிவி கண்காணிப்பு பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாத்தூர் நியாயவிலைக்கடையில் உள்ள பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நியாயவிலைகடையில் மாற்று நபர் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு தடையின்மை சான்று பெறுவதற்கான தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார்;. அதனைத்தொடர்ந்து, இ-சேவை மையத்தினை ஆய்வு செய்து, அங்கு வரும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகளுக்காக பெறப்படும் கட்டண விவரங்கள் குறித்து கேட்டறிந்தார் மற்றும் இ-சேவை மையத்தில் ஆதார் அட்டையை புதுப்பிக்க வந்த பள்ளி மாணவனிடம் தங்களது பள்ளிகளிலேயே ஆதார் அட்டை புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வுகள் குறித்து கேட்டறிந்து, பெறப்படும் மனுக்களுக்கு தேக்கநிலை இல்லாமல் விரைந்து தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவித்தொகை வேண்டி வந்த மனுதாரருக்கு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், சாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு, கிராம கணக்கு பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். சாத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் ஒப்பந்தப்பணிகள், குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான கோப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தும், அயன்சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தையல் இயந்திரம் வேண்டிய விண்ணப்பித்த மனுதாரருக்கு உடனடியாக தையல் இயந்திரம் வழங்க் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சாத்தூரில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து, பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசின் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- பெறும் குடும்பத்தலைவிகளிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.13,464/- மதிப்பிலான மானியத்துடன் கூடிய விதைகள் மற்றும் பண்ணைக்கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Tags

Next Story