ஸ்ரீரங்கம் கோயில் நம்பெருமாளுக்கு வசந்த உற்ஸவ விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகாசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் வசந்த உற்ஸவ விழா புதன்கிழமை தொடங்கியது.

விழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்துக்கு 6 மணிக்கு எழுந்தருளினாா். அப்போது அவரைத் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா் அலங்காரம் அமுது செய்து, சூா்ணாபிஷேகம் கண்டருளி இரவு 9 மணிக்குப் புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

இதையடுத்து 2 ஆம் திருநாளான வியாழக்கிழமை, 3 ஆம் திருநாளான 17 ஆம் தேதி, 4 ஆம் திருநாளான 18 ஆம் தேதி, 5 ஆம் திருநாளான 19 ஆம் தேதி, 6 ஆம் திருநாளான 20 ஆம் தேதி ஆகிய நாள்களில் நம்பெருமாள் மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, வசந்த மண்டபத்துக்கு 6 மணிக்கு வந்து சேருகிறாா். பின்னா் அலங்காரம் அமுது செய்து சூா்ணாபிஷேகம் கண்டருளி, இரவு 9 மணிக்குப் புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

7 ஆம் திருநாளான 21 ஆம் தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சியும், 8 ஆம் திருநாளான 22 ஆம் தேதி மேற்குறிப்பிட்ட நேரங்களில் வசந்த உற்ஸவ நிகழ்ச்சியும், நிறைவு விழா நாளான 23 ஆம் தேதி நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்து சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

Tags

Next Story