வாசீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி தீவிரம்

உத்திரமேரூர் அருகே வயலக்காவூர், ஏலவார் குழலி, வாசீஸ்வரர் கோவில் புணரமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், வயலக்காவூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஏலவார் குழலி அம்பாள் சமேத வாசீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கட்டடப் பகுதிகள், சிதிலமடைந்ததை அடுத்து, பராமரிப்பு பணி மேற்கொள்ள அப்பகுதியினர் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கையின்படி, ராஜகோபுரம் மற்றும் மண்டபத்தில் சேதமான பகுதிகள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 36 அடி உயரம் கொண்ட புதிய கொடிக்கம்பம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதியினர் கூறுகையில், ''ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் குறிப்பிட்ட சிலரது பெரும் நன்கொடை உதவியால் பல ஆண்டுகளுக்கு பின் இக்கோவில் திருப்பணி மேற்கொண்டுள்ளோம். வரும் ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அனுமதியை எதிர்பார்த்து உள்ளோம்,'' என்றார்.
