தடுப்புக்கம்பியால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

தடுப்புக்கம்பியால்  விபத்தில் சிக்கும் வாகனங்கள்
விபத்தில் சிக்கிய ஆட்டோ 
தரப்பாக்கம் அருகே இரண்டாம்கட்டளை செல்லும் சாலையில் உள்ள கனரக வாகன தடுப்பு கம்பியை அறியாமல் வந்து வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றன. எச்சரிக்கை பலகைகளை வைத்து வாகனங்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரவாயல் -தாம்பரம் பை-பாஸ் சாலையையொட்டி, சர்வீஸ் சாலை உள்ளது. இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், குன்றத்துார் அருகே தரப்பாக்கம் முதல் அனகாபுத்துார் வரை, அடையாறு கால்வாய் குறுக்கே 1 கி. மீ. , துாரத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கவில்லை. இதனால், தரப்பாக்கம் அருகே சர்வீஸ் சாலை முடிவடையும் இடத்தில், இரண்டாம்கட்டளை ஊராட்சிக்கு செல்லும் குறுகலான சாலை உள்ளது. இந்த வழியே, கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க, சாலையின் குறுகே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வழியே நேற்று சென்ற லோடு ஆட்டோவின் மேல்புற பகுதி, சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு கம்பியில் சிக்கியது.

இதையடுத்து ஜே. சி. பி. , இயந்திரம் வாயிலாக லோடு ஆட்டோ மீட்கப்பட்டது. கடந்த டிச. , 22ம் தேதி, இதே தடுப்பில் லோடு ஆட்டோ மோதி விபத்தில் சிக்கியது. அப்பகுதி மக்கள் கூறியதாவது: குறுகலான சாலையில் உள்ள தடுப்பில், கார், ஆட்டோ, மினி வேன்கள் செல்வதால், குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இங்குள்ள சர்வீஸ் சாலை முடிவடைவது தெரியாமல் வாகனங்கள் செல்வதால், தடுப்பு கம்பியின் மீது மோதி, அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே, சர்வீஸ் சாலை முடியும் இடத்திற்கு ஒரு கி. மீ. , துாரத்திற்கு முன், அறிவிப்பு பலகை வைத்து அதில், நான்கு சக்கர வாகனங்கள் செல்லக்கூடாது என குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story