வரிசை கட்டி நின்று வழிபாடு செய்த வாகனங்கள்

அன்னூர் அருகே உள்ள உதயமரத்து கருப்பராயர் கோவிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாடடி வருகின்றனர்.

சென்னையில் புதிதாக வாகனங்களை வாங்கும் பெரும்பாலானோர் பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் வாகனங்களுக்கு பூஜை போடுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படும். சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலை போலவே கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது காக்காபாளையம் மேடு உதயமரத்து கருப்பராயர் கோவிலில் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் இந்த கோவிலில் பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதேபோல தொலைதூரம் பயணிக்கும் கால் டாக்ஸி,கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் இங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி வழிபட்டுச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இங்கு வாகனங்களை நிறுத்தி வழிபட்டால் பயணம் எந்தவித தடங்களும் இன்றி பாதுகாப்பாக இருக்கும் என்பது ஓட்டுநர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த நிலையில் ஆயுத பூஜையை ஒட்டி கருப்பராயர் கோவிலில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வாழைமரம் கட்டி, விபூதி, சந்தனம்,குங்குமம் வைத்து வாகன உரிமையாளர்கள் வழிபட்டு வருகின்றனர். அதேபோல வாகனங்களின் சாவிகளை கருப்பராயர் முன்வைத்து கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர்.

இன்று உதயமரத்து கருப்பராயர் கோவிலில் வாகனங்களுக்கு பூஜை செய்வதற்காக ஏராளமான கால் டாக்ஸிகள் மற்றும் கார்கள் வரிசை கட்டி அணிவகுத்து நிற்கின்றன. முன்னதாக கருப்பராய சாமிக்கு மாலை அணிவித்து பொங்கல், சுண்டல்,பொரி,அவல் பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags

Next Story