சீட் கவர் பொருத்த நிறுத்தியிருந்த வாகனகள் தீப்பிடித்து எரிந்து சேதம் !!

சீட் கவர் பொருத்த நிறுத்தியிருந்த வாகனகள்  தீப்பிடித்து எரிந்து சேதம் !!

தீ

சேலத்தில் சீட் கவர் பொருத்த நிறுத்தியிருந்த கார், வேன் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.

சேலம் தென் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் அழகாபுரம் ஸ்ரீராம் நகர் பகுதியில் கார்களுக்கு புதிதாக சீட் கவர்கள் பொருத்தும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் கடைக்கு சென்றார். பின்னர் சீட் கவர் வாங்குவதற்காக வெளியில் சென்று உள்ளார். அந்த கடை முன்பு புதிதாக சீட் கவர் பொருத்துவதற்காக கார், ஆம்னி வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.

மதியம் 1 மணிக்கு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், வேனில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் 2 வாகனங்களும் மளமளவென தீப்பிடித்து எரிந்தன. மேலும் கடையில் இருந்த சீட் கவர்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் எரிந்தன. மேலும் அதன் அருகில் உள்ள மரக்கடை மற்றும் கடையின் மேற்கூரை, அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டைகளிலும் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

கார், சீட் கவர் கடை, மரக்கடை என 3-ம் ஒரே நேரத்தில் எரிந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. சீட் கவர்கள் பொருத்தும் கடை, கார், வேன், மரக்கடைகள் தீயில் எரிந்து சேதமாகி உள்ளது. எனவே லட்சக்கணக்கில் பொருட்கள் சேதமாகி இருக்கலாம் என்று கூறினர்.

Tags

Next Story