பொன்னமராவதி அருகே மீன் பிடி திருவிழா!

காட்டுப்பட்டி கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுக்கோட்டை மாவட்டம் அதிக பாசன நீர் நிலைகளை கொண்ட மாவட்டமாகும்.அந்த நீர் நிலைகளில் மீன்களை வளர்ப்பதும் நீர் வற்றியதும் அதனை பொதுமக்கள் பிடிப்பது மீன்பிடி திருவிழா ஆகும். பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் வற்றும் சூழலில் உள்ள பாசன‌ கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். சாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி இந்த மீன்பிடி திருவிழாவை ஊர் ஒற்றுமைக்காக நடத்துவர்.

அந்த வகையில், பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும் மீன்பிடி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த வருட மீன்பிடி திருவிழாவில் அதிகாலையிலேயே பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா,வலை,பரி,கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களைபிடித்தனர்.

அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை சிறிய மீன்களான சிசி, போட்லா, கட்லா, விரால்,சிலேபி,அயிரை, கெண்டை ஆகிய மீன்கள் கிடைத்தன.தூரி என்ற‌ மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர். முன்னதாக ஊர் பெரியவர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வெளியூர் நபர்களும் கண்மாய்க்கு வந்திருந்தனர்.

Tags

Next Story