மேம்பாலம் இல்லாததால் தவித்து வரும் கிராம மக்கள்

பெரியகுளம் அருகே வாய்காலின் குறுக்கே மேம்பாலம் அமைக்காததால் கடந்த 25,ஆண்டுகளாக விவசாயப் பணிகள், கோவில் திருவிழா, இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வது உள்ளிட்டவற்றில் கிராம மக்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எ.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான எ.புதூர், மறுகால்பட்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களை ஒட்டி உள்ள பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு நீர் கொண்டு செல்வதற்காக பெரிய அகண்ட சிமெண்ட் வாய்க்கால் வெட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மேலும் வாய்க்கால் வெட்டப்பட்ட போது வாய்க்காலின் மறு கரையில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு செல்வதற்காக, வாய்க்காலின் மேல் பாலம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்தும், இதுவரையில் பாலம் கட்டாத நிலையில் வாய்க்காலின் மறு கரையில் உள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்வதற்கு 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வாய்க்காலின் மறுகரையில் உள்ள மயான கரைக்கு செல்வதற்கும், திருவிழா காலங்களில் வைகை ஆற்றில் சென்று சுவாமிகளை அலங்காரம் செய்து வருவதற்கும், கிராம மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக எ.புதுார் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் விவசாய விலை நிலங்களுக்கு சென்று விவசாய விளைபொருட்களை கொண்டு வருவதற்கும், இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கும், திருவிழா காலங்களில் வைகை ஆற்றில் சென்று சுவாமி அலங்காரம் செய்து கொண்டு வருவதற்கும், இறந்தவர்களின் உடல்களை மயான கரைக்கு கொண்டு செல்வதற்கும் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டாததால் பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதோடு தொடர்ந்து 25,ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரையில் பாலம் கட்டவில்லை என கூறுவதோடு வாய்க்காலின் மேல் புதிய பாலம் கட்டி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story