ஆரோவில் அருகே புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்த கார்

ஆரோவில் அருகே புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்த கார்

காவல்நிலையத்தில் புகுந்த கார்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மையார்பாளையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு, பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சென்னை எழும்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் கிஷோர் (27) என்பவர் தனது நண்பருடன் ஆரோவில்லுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அவர்கள் ஆரோவில்லில் இருந்து பொம்மையார்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

காரை கிஷோர் ஓட்டினார். பொம்மையார்பாளையம் புறக்காவல்நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் புறக்காவல்நிலையத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புறக்காவல் நிலையம் பலத்த சேதம் அடைந்தது. விபத்து நடந்தபோது புறக்காவல் நிலையத்தில் போலீசார் யாரும் பணியில் இல்லை.

காரில் வந்த கிஷோர் மற்றும் அவரது நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புறக்காவல் நிலையம் மீது ஏற்கனவே கார் ஒன்று மோதியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story