வி.பி.சிந்தன் நினைவு தினம் கொடியேற்று நிகழ்ச்சி 

உழைப்பாளி மக்களின் தலைவன் வி.பி.சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க அமைப்பு சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை சிஐடியு தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க அலுவலகத்தில், உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவன் வி.பி.சிந்தன் 37 ஆம் ஆண்டு நினைவு தினம், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க 58 ஆம் ஆண்டு அமைப்பு தின நிகழ்ச்சி சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சிஐடியு கொடியை, மாவட்ட துணைத் தலைவர் ஈ.டி.எஸ் மூர்த்தி, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கக் கொடியினை சங்கச் செயலாளர் பொன்.ரவிக்குமார் ஆகியோர் ஏற்றி வைத்தனர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.ராஜா, எஸ்.மில்லர் பிரபு, தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மணிமாறன், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத் தலைவர் க.ராமச்சந்திரன், பொருளாளர் டி.நீலகண்டன், இணைச்செயலாளர் எஸ்.சத்தியநாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, வி.பி.சிந்தன் உருவப்படத்துக்கு மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர். ரத்த தான முகாம் இதனைத் தொடர்ந்து மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க தஞ்சை கிளை சார்பில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் 21 பேர் ரத்த தானம் வழங்கினர்.

தானமாகப் பெறப்பட்ட ரத்தம், தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரைவுப் போக்குவரத்து கழகம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள, அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில், தொழிற்சங்க தலைவர் வி.பி.சிந்தன் நினைவு தினக் கொடியேற்று நிகழ்ச்சி, விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியு கிளைத்தலைவர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது. இதில், விரைவுப் போக்குவரத்துக் கழக மாநில துணைச் செயலாளர் பி.வெங்கடேசன், விரைவுப் போக்குவரத்து கழக கிளைப் பொருளாளர் முருகேசன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு, ஆட்டோ சங்கம் மாநகரச் செயலாளர் ராஜா, தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் மில்லர் பிரபு, மாவட்டத் தலைவர் மணிமாறன், அரசுப் போக்குவரத்து கழக சிஐடியு சங்கச் செயலாளர் ராமசாமி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story