"சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் வாலாஜாபாத் கிளை நுாலகம்"

சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் வாலாஜாபாத் கிளை நுாலகம்

சேதமடைந்த கிளை நுாலகம்

வாலாஜாபாத் பகுதியில் உள்ள கிளை நூலக கட்டிடம் சேதம் அடைந்து காணப்படுகிறது இதனால் வாசகர்கள் அச்சம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள கிளை நுாலகத்தில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 4,960 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் உள்ளிட்டோர் இந்த நுாலகத்திற்கு வந்து தங்களது வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர். இந்த நுாலகம் போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடியில் இயங்குவதோடு, நுாலகத்திற்கான கட்டடமும் மிகவும் பழுதடைந்துள்ளது. ஆபத்தான இந்த கட்டடத்தை அகற்றி, புதிய கட்டட வசதி ஏற்படுத்த பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும், அதற்கான பணி துவங்குவதில் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, வாலாஜாபாத் கிளை நுாலக ஊழியர் ஒருவர் கூறியதாவது: வாலாஜாபாத் கிளை நுாலகத்திற்கான இடம் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்பதால், கால்நடைத் துறையிடம் அனுமதி பெற வேண்டி இருந்தது. அதற்கான அனுமதி கடிதம் பெற்று சமர்ப்பித்துள்ள நிலையில், வருவாய் துறையினர் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நகர்வுகளை தாமதப்படுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, விரைவில் பணியை துவக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story