பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களை கட்டிய ஆட்டுச் சந்தை

ஜெயங்கொண்டம் அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் குவிந்ததால் களை கட்டியது.

அரியலூர், ஜூன் 16- ஜெயங்கொண்டம் அருகே பிரசித்தி பெற்ற குறுக்கு ரோடு ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான ஆடுகள் குவிக்கப்பட்டு விற்பனையானது களை கட்டியது. இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆட்டுச் சந்தையில் முகாமிட்டு, தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்று பண்டிகையை விமர்சையாக கொண்டாடுவார்கள். அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பிரசித்தி பெற்ற குறுக்கு ரோடு ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான ஆடுகள் சந்தைக்கு வரவழைக்கப்பட்டது.

தேனி, கம்பம்,தஞ்சாவூர், கடலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து சுமார் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஆடுகளை விற்றனர். இதில் செம்மறியாடு, நாட்டு வெள்ளாடு, கருப்பு ஆடு, ஆந்திர ஆடு, பல்லு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் இங்கு கிடைக்கும் என்பதால் இஸ்லாமியர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான ஆடுகளை வாங்கிக் கொண்டு வாகனத்தில் எடுத்துச் சென்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல விற்பனை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ஜெயங்கொண்டம் குறுக்குக் ரோடு ஆட்டுச் சந்தை களைக் கட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story