தேசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம்,வெள்ளி வென்ற வீரர்களுக்கு வரவேற்பு

தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்த காஞ்சி ஏர் ரைபிள் அகாடமி வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தற்போதைய காலகட்டத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு துறையில் அதிக நாட்டம் கொண்டு பல்வேறு விளையாட்டுகளை தேர்வு செய்து அதில் சிறப்பு பயிற்சிகளை பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் விளையாட்டின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு கூடுதல் சிறப்பு தகுதி கிடைப்பதால் பெற்றோர்களும் இதனை அதிகளவில் ஊக்குவித்து வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மடம் தெரு, அறிஞர் அண்ணா பூங்கா எதிரில் அமைந்துள்ளது காஞ்சி ஏர் ரைபிள் அகாடமி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் துப்பாக்கி சுடுதல் குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லி காசியாபாத் பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் 12 வயது முதல் 16 வயது வரையும், 20 வயதுக்கு மேற்பட்டோர், பெண்கள் பிரிவு என ஏழு பிரிவுகளில் 14 வகையான போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பாக 45 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் காஞ்சி ஏர் ரைபிள் அகாடமி சார்பில் பயிற்சியாளர் பாபு தலைமையில் நான்கு வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் , 14 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் சஞ்சய் , 21 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சுரேஷ் , பெண்கள் பிரிவில் ஷோபனா என மூவரும் தங்கப் பதக்கம் பெற்றனர். இதேபோல் 20 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் டாக்டர்.செந்தில்குமார் வெள்ளி பதக்கமும் வென்றனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் காஞ்சிபுரம் திரும்பிய வீரர்களுக்கு பயிற்சி அகாடமி சார்பில் வீரர்களை வரவேற்று கேக் வெட்டியும் , பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Tags

Next Story