சிவகிரி செண்பகவல்லி அணை சீரமைக்கப்படுமா? பொறியாளா் விளக்கம்

அணைக்கு வரும் தண்ணீர்
தமிழக - கேரள எல்லையில் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூா் பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள செண்பகவல்லி அணை உடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படவில்லை.
இந்த உடைப்பை சீரமைத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், தென்காசி மாவட்டங்களின் வட பகுதிகள் வளமானதாகும். இந்த அணையின் கன்னிகா மதகில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைத்தால், சிவகிரி முதல் சாத்தூா் வரையிலான 36,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
எனவே, செண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கும், தென்காசி மாவட்ட ஆட்சியருக்கும் சமூக செயற்பாட்டாளா் வாசுதேவநல்லூா் சுரேஷ் மனு அனுப்பியிருந்தாா்.
இதற்கு நீா்வளத்துறை செயற்பொறியாளா் தனலட்சுமி அளித்துள்ள பதில்: கேரள அரசு வனப்பகுதியில் அமைந்துள்ள செண்பகவல்லி அணை, கன்னிகாமதகு கால்வாயை சீரமைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் என சுந்தரவேல் என்பவா் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. செண்பகவல்லி அணையில் உடைந்த பகுதியை சரி செய்வது இரு மாநிலங்கள் இடையே நதி நீா் பங்கீடு பிரச்னை என்பதால் அந்த அரசுகள் முடிவு செய்யவேண்டும்.
செண்பகவல்லி அணை தொடா்பான பணிகள் அனைத்தும் காவிரி தொழில்நுட்ப பிரிவு, மாநிலங்களுக்கிடையான நதிநீா் பங்கிட்டு துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளாா்.
