வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: அண்ணன்-தம்பி கைது!

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: அண்ணன்-தம்பி கைது!

 கைது

ஒடுகத்தூர் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அண்ணன் தம்பி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த வரதலம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணிலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார், லாரி டிரைவர். இவரது மனைவி லாவண்யா (34). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த லாவண்யா கடந்த 30-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட லாவண்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் கவிதா மேல் விசாரணை நடத்தினார். இதில், லாவண்யாவின் கணவர் சசிகுமார் மற்றும் அவரது தம்பி சந்தோஷ்குமார் ஆகியோர் கடந்த சில மாதமாக லாவண்யாவிடம் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு பிரச்சினை செய்து வந்துள்ளனர்.

மேலும், சசிகுமார் மனைவியிடம் பணம் கேட்டு அடித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வேப்பங்குப்பம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சசிகுமார், சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story