கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் தற்கொலை

கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் தற்கொலை

தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவிலில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள வல்லன்குமாரவிளையை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (29). நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் டைபிஸ்ட் ஆக வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு பாக்கியலட்சுமி மாலையில் வீட்டிற்கு வந்தார். கணவன் மனைவி இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்ததாகவும், இரவு குழந்தையுடன் இருவரும் தூங்க சென்றதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலையில் ராஜலிங்கம் கண் விழித்து பார்த்த போது படுக்கை அறையில் மனைவியை காணவில்லை. வீட்டில் உள்ள ஹாலில் பாக்கியலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த ராஜலிங்கம் இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக தொங்கிய பாக்கியலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாக்கியலட்சுமி தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளே ஆனதால் நாகர்கோவில் ஆர்டிஓ விசாரணை நடத்த உள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story