டெங்கு காய்ச்சலால் பெண் பலி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலைமறியல் 

டெங்கு காய்ச்சல் பாதித்து பெண் பலியான நிலையில், உரிய நடவடிக்கை சுகாதாரத் துறையினரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சானூரப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்நோய் பாதிப்பால், செங்கிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த 24 வயது பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், செங்கிப்பட்டி பகுதியில் சுகாதாரத் துறையின் அலட்சியம் காரணமாக, காய்ச்சல் நோய் பரவி வருவதாக கூறி, நடவடிக்கை எடுக்காத சுகாதாரத் துறையினரை கண்டித்து சானூரப்பட்டி கடைவீதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தமிழரசன், மருதமுத்து, சோலை.ரமேஷ், மற்றும் காமராஜ், சந்திரபோஸ், சிவகுமார், ராமஜெயம், அறிவழகன், மாரிமுத்து, மதி, வின்சென்ட் அமமுக அய்யாதுரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு பூதலூர் வட்டாட்சியர் மரிய ஜோசப், திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் கூறுகையில், "இப்பகுதியில் காய்ச்சல் நோய் பரவி வருவதை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்கள் சந்திக்கும் செங்கிப்பட்டி பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும். இதனை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். எனவே அரசு மக்களுக்கான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்" என்றார்.

Tags

Next Story