திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பெண் திடீர் சாவு

திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பெண் திடீர் சாவு
கோப்பு படம் 
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் திடீரென இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பந்தாடுகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ் ணன் மனைவி கங்கம்மாள் (வயது 55). இவர் சம்பவத்தன்று மாலை திண்டிவனம் இறையானூர் பகுதியில் உள்ள தனது உறவினர் தங்கமணி வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு புறப்பட்ட கங்கம்மாளை தங்கமணி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று திண்டிவனம் மேம்பாலத்துக்கு கீழ் இறக்கிவிட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தங்கமணி வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிள் மோதி கங்கம்மாள் காயம் அடைந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து தங்கமணி அவரது மனைவி உஷா ஆகியோர் விரைந்து சென்று காயம் அடைந்து கிடந்த கங்கம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் சிகிச்சை முடிந்து அங்கிருந்து வீட்டுக்கு சென்ற கங்கம்மாள் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story