ரயிலில் கழுத்து அறுக்கப்பட்டு மயங்கிய நிலையில் பெண் மீட்பு

கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள் வண்டியில் முன்பக்க பொதுப்பெட்டியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதாக விருதுநகர் இரயில்நிலைய மேலாளருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த நிலையில் விரைந்து சென்ற ரயில்வே போலீசார் அந்தப் பெட்டியில் ஆய்வு செய்தனர்.
அப்போது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கடுமையாக தாக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மீட்ட போலீசார், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையளித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் பூஜக்கடவு பகுதியைச் சேர்ந்த ரோஷினி (41) என்பதும், இவர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு, பாளையங்கோட்டை பெண்கள் சிறையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.மேலும், ரோஷினி கடுமையாக தாக்கியதோடு கழுத்தை அறுத்தது யார்? எதற்காக ? என்பது குறித்து இரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
